கோட்டக்குப்பம் பகுதியில் கடல் அரிப்பு தடுப்பு பணி -சென்னை பொறியாளர் உறுதி
(புதுவை&தமிழக எல்லையான கோட்டக்குப்பம் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்னை மண்டல
தலைமை பெறியாளர் அன்பழகன் பார்வையிட்டார். அருகில் விழுப்புரம் ஆட்சியர் பழனிசாமி)
கோட்டக்குப்பம் பகுதியில் கடல் அரிப்பு தடுப்பு திட்டப்பணி இரண்டு மாதத்தில்
தொடங்கும் என்று சென்னை பொறியாளர் தெரிவித்துள்ளார்.
புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில்
கடந்த 5 வருடங்களாக கடல் அரிப்பு ஏற்பட்டு
120வீடுகள், வலைப்பின்னும் கூடம், கழிவறை, சிமெண்ட் சாலை, தென்னை மரங்கள்
உள்ளிட்டவைகள் கடலில் அடித்து செல்லப்பட்டன.
தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை வைத்திருந்தனர். கடந்த இரு வாரங்களுக்கு முன் நடந்த
மறியலின் போது மாவட்ட வருவாய்
அலுவலர் வெங்கடாசலம் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிலையில் விழுப்புரம் ஆட்சியர் பழனிசாமி,
தலைமை திட்ட உருவாக்க பொறியாளர் குமரேசன், தலைமை வடிவமைப்பு மற்றும்
ஆராய்ச்சியாளர் பத்மாவதி, சென்னை மண்டல தலைமை
பொறியாளர் அன்பழகன் ஆகியோர் கடல் அரிப்பு ஏற்பட்ட பகுதிகளை நேற்று காலை பார்வையிட்டு குறைகளை கேட்டனர்.
அப்போது கூறிய சென்னை மண்டல தலைமை பொறியாளர் அன்பழகன்,
அறிவியல் முறையில் இந்த கடல் அரிப்பை தடுக்க ஆலோசித்து
முடிவெடுக்கப்படும். இந்த தகவலை அரசுக்கு தெரிவித்து நிதி பெற்று இப்பணி வெகு விரைவில் முடிக்கப்படும்.
இது பெரிய அளவிலான திட்டம்.
இந்த திட்டப்பணிகளை தொடங்க இன்னும் 2 மாதம் ஆகும் என்றார்.
பின்னர் கூறிய ஆட்சியர் பழனிச்சாமி,
கடல் அரிப்பை தடுக்க 200 மீட்டர் அளவுக்கு கருங்கல் கொட்டப்பட்டுள்ளது.
இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து
வருகிறது. அருகில் உள்ள புதுச்சேரி மாநில கடற்கரை ஓரத்தில் கொட்டப்பட்டுள்ள கல்லால்
இந்த பகுதியில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
மீனவர்களுக்கு ரூ. 9 கோடியில் மேடான பகுதியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
அடுத்த மாதத்திற்குள் வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்றார்.
ஆய்வின் போது வானூர் தாசில்தார் சியாமளா, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் அதிகாரிகள்,
புதுவை தலைமை பொறியாளர்கள் ஆகியோர் இருந்தனர்.