தானே புயலுக்கு பின் புதுப்பித்த டியூஷன் சென்டர்

கோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பாக நடத்தும் டியுஷன் சென்டரை தானே புயல் தாக்கியதால் சேதம் ஏற்பட்டதை தங்களின் கவனதிருக்கு கொண்டு வந்து, அதற்கு உதவி செய்யும்படி தங்களிடம் கோரிக்கை வைத்து இருந்தோம், அந்த கோரிக்கையை ஏற்று உதவி செய்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும்  கோட்டகுப்பம் குவைத் நலபேரவை சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம். அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் நல்லருள் புரிய பிரார்த்திக்கிறோம்.

 

1) பழைய பட்டின பாதையில் உள்ள மையத்திற்கு ரூபாய் 18,000

2) ரஹ்மத் நகரில் உள்ள மையத்திற்கு மொத்தம் ஆனா தொகை ரூபாய் 30,000

 

 

இதில் பாதி தொகை ரூபாய் 15,000 ரஹ்மத் நகர் பள்ளிவாசல் முத்தவல்லி சாகுல் ஹமீது வசம் கொடுக்கப்பட்டு புனரமைக்க பட்டுவிட்டதை உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியோடு தெரிவித்து  கொள்கிறோம் .

தகவல் :ரஹ்மதுல்லாஹ் குவைத் 

படங்களை பெரிதாக பார்க்க அதன் மேல் அழுத்தவும் 

Uncategorized இல் பதிவிடப்பட்டது . 1 மறுமொழி »

புயல் நிவாரணம் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ் – நிதி இல்லாமல் நடக்கிறது, கண் துடைப்பு நாடகம்!

நிதி இல்லாமல் நடக்கிறது, கண் துடைப்பு நாடகம்!

 

விவசாய நிலங்களை புயல் சூறையாடிச் சென்று 15 தினங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இன்னமும் முழுமையான அடிப் படை வசதிகள் கிடைக்கவே இல்லை. தமிழகத்தில்  5,250 கோடி சேதம் என்றும் புதுவையில்  2,475 கோடி சேதம் என்று கணக்கிட்டு, மத்திய அரசிடம் நிதிஉதவி கேட்கப்பட்டது. பாதிப்புகளைப் பார்வையிட்ட மத்தியக் குழுவும், ‘பாதிப்பு அதிகம்தான்…’ என்று ஒப்புக்கொண்டு முதல் கட்ட மாக தமிழகத்துக்கு 500 கோடியும் புதுவைக்கு 125 கோடியும் இடைக்கால நிவாரணம் ஒதுக்கி உள்ளது. அடுத்து ஒதுக்கப்படுவதும் சில நூறு கோடி களைத் தாண்டாது என்பதுதான் நிச்சயமான உண்மை! 

 

‘தமிழகத்தை வஞ்சித்து விட்டது மத்திய அரசு…’ என்று கடலூர், விழுப்புரம், புதுவை பகுதி மக்கள் கொந்தளித்து வருகிறார்கள். நிவாரணத் தொகை வழங்குவதில் ஏன் இத்தனை சிக்கல் என்பது குறித்து விளக்கமாகப் பேசினார் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆறுபாதி கல்யாணம். ”நம் நாட்டின் இயற்கை அமைப்பின்படி இயற்கை சீற்றங்களால் ஆண்டு தோறும் 40,000 கோடி ரூபாய் முதல் 50,000 கோடி ரூபாய் வரை பயிர்கள் சேதம் அடைகிறது. படகு, வீடு மற்றும் கட்டுமானங்களின் சேதம் சுமார் 30,000 கோடி ரூபாய் ஆகிறது. உதாரணமாக இப்போது தாக்கிய புயலில் மின்சார சேதம்தான் மிகவும் அதிகம். இவற்றைத் திரும்பக் கட்டமைக்கவும் விவசாயப் பாதிப்புகளை ஈடுகட்டவும் மத்திய அரசு, இயற்கைப் பேரிடர் மேலாண்மை துயர் துடைப்பு நிதியை வழங்குகிறது. மாநில அரசின் வசமும் இப்படி ஒரு நிதி இருக்கிறது. இவற்றில் இருந்துதான் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

மத்திய அரசு இந்த ஆண்டு தேசியப் பேரிடர் மேலாண்மை துயர் துடைப்பு நிதிக்காக ஒதுக்கியுள்ள தொகை 4,525 கோடி ரூபாய்தான். இது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான தொகை. ஆனால், தமிழ்நாடு மற்றும் புதுவை ஆகிய இரண்டு மாநில அரசுகளும் கேட்டிருக்கும் தொகையோ 7,725 கோடி ரூபாய். இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கும்போது, 625 கோடி ரூபாயைக்கொண்டு எப்படி புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளமுடியும்? இந்த நிதி எப்படி முழுமையான துயர் துடைக்கும் நிதியாக அமையும்?

 

இது தவிர, இயற்கைச் சீற்றங்களை சமாளிக்க முன்கூட்டியே ஐந்து ஆண்டுகளுக் கான நிதியை மாநில அரசுக்கு மத்திய அரசு ஒதுக்குவது உண்டு. அப்படி, தமிழகத்துக்கு மாநிலப் பேரழிவு நிவாரண நிதியாக 2010-15 ஆண்டுகளுக்காக 1,621 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 75 சதவிகிதம் மட்டுமே மத்திய அரசு கொடுக்கும், மீதம் உள்ளதை மாநில அரசு ஒதுக்க வேண்டும். இந்த ஆண்டு அந்தத் தொகையில் இருந்து நிவாரணத்துக்காக ஒதுக்கப் பட்டுள்ள தொகை 308 கோடி ரூபாய்தான்.

 

மத்திய அரசிடம் இருந்து மொத்த நிதியையும் தமிழகம் எதிர்பார்க்கிறது. அவ்வளவு நிதியையும் மத்திய அரசே கொடுக்க வேண்டும் என்றால், தன்னிடம் உள்ள இயற்கைப் பேரிடர் மேலாண்மைத் துயர் துடைப்பு நிதியை அதிகமாக்க வேண்டும். அந்த நிதியை உயர்த்திக் கொள்வதற்கும் வழி இருக் கிறது.

 

 

இந்தியாவில் சேவைவரி 1994-ம் ஆண்டுதான் விதிக்கப்பட்டது. அப்போது, சேவை வரியின் வரவு 410 கோடி ரூபாயாகத்தான் இருந்தது. ஆனால், இப்போது அது 82,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. அந்த வரியில் இருந்து 50 சதவிகிதத்தை மட்டும் இந்த நிதிக்கு ஒதுக்கினால்… எத்தனை பெரிய இயற்கைப் பாதிப்பு, தேசத்துக்கு வந்தாலும் சமாளித்துவிட முடியும். இப்படிக் கிடைக்கும் நிதியில் சரிபாதி விவசாயத்துக்கும், மீதம் உள்ள சதவிகிதம் கட்டமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கும் ஒதுக்க வேண்டும். விவசாயத்துக்கு ஒதுக்கும் ரூபாயில் முழுமையான காப்பீடும் செய்து விட்டால், இன்னும் அதிகப் பாதுகாப்பு விவசாயிகளுக்குக் கிடைக்கும்.

 

மாநில அரசும் தன்னுடைய இயற் கைப் பேரிடர் பாதுகாப்பு நிதியை அதிகரித்துக்கொள்ள, டாஸ்மாக் வருமானத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நிதியை ஒதுக்க வேண்டும். இப்போது வரும் 1,60,000 கோடி ரூபாயில் இருந்து 25 சதவிகிதமான 4,000 கோடியை மட்டும் இந்த நிதிக்கு ஒதுக்கினாலே, எவ்வளவோ நல்ல காரியங்களைச் செய்ய முடியும். இப்படி நிதியை அதிகரித்து செயல்பட்டால் மட்டும்தான், துயர் துடைப்புப் பணிகள் முழுமையாகவும் உண்மையாகவும் நடக்கும். அப்படி இல்லாத பட்சத்தில், புயல், வெள்ளம் என்று சீற்றங்கள் வரும்போதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகத்தைத்தான் மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து நடத்திக்கொண்டே இருக்கும்” என்று விளக்கமாகச் சொன்னார்.

 

சரிதானே!  

 

Nandri / The vikatan

Uncategorized இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பசுமைப் பூங்காவுக்கு மொட்டை!

புதுவைக்குப் பசுமையை வாரி வழங்கிய வள்ளல் என்று தாவிரவியல் பூங்காவைச் சொல்லலாம். பார்க்கும் இடத்தில் எல்லாம் பசுமை தாண்டவமாடிய அந்தத் தாவரவியல் பூங்காவை, ‘தானே’ புயல் தாக்கவே… அத்தனை மரங் களும் அடியோடு சாய்ந்துவிட்டன. தங்கள் வீட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பைவிட, இந்தப் பூங்காவின் நிலை கண்டு கண்ணீர் வடிக்கிறார்கள் புதுவை மக்கள்.

 

‘தானே’ புயலால் தாக்கப்பட்டு சின்னாபின்னமாகக் கிடந்த பூங்காவுக்குச் சென்றோம். நுழைவாயிலில் 175 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்து கிடந்தது.

 

பூங்காவின் நிலை பற்றிப் பேசிய அதிகாரிகள், ”பிரெஞ்சு ஆட்சியின் கீழ் புதுவை இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தாவரவியல் பூங்காவுக்கு இப்போது வயது 186. பிரான்ஸ் நாட்டு தாவர வியல் நிபுணர் ஜார்ஜ் சாமுவேல் பெரோடெட் என்பவர்தான் இங்கே இருக்கும் பல அபூர்வ மரங்களை நட்டு வைத்தவர். 1834 முதல் 1839 வரை தாவரவியல் நிபுணராக புதுச்சேரியில் அவர் இருந்தார். வெளி நாடுகளில் இருந்து அரிதான விதைகளை எடுத்து வந்து, பக்குவமாக விதைத்து, இந்த இடத்தைத் தாவரவியல் பூங்காவாக உருவாக்கினார். 1960-ம் ஆண்டு இந்தப் பூங்கா புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 30 ஏக்கர் பரப்பளவில் 144 வகையான மரங்கள் ஆயிரக் கணக்கில் இந்த பூங்காவில் இருந்தன. இந்தப் பூங்கா, நகரத்தின் மையப் பகுதியில் இருப்பதால், புதுச்சேரி மக்களுக்குச் சுத்தமான பிராணவாயு கொடுத்து வந்தது. நாளுக்கு நாள் வாகனங்கள் பெருக்கம் அதிகம் ஆனாலும், இந்தப் பூங்கா மக்களுக்கு பெரும் ஆறுதலாகவே இருந்தது. விடுமுறை தினம் என்றால் குழந்தைகள் இங்கே குதித்து மகிழ்வதே அத்தனை அழகாக இருக்கும்.

 

இது எல்லாமே போன டிசம்பர் 29-ம் தேதி வரைக்கும்தான். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் கடல் இருந்த காரணத்தால் தாவரவியல் பூங்காவுக்கு வரலாறு காணாத சேதம். ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. பல மரங்கள் பாதியாக முறிந்து நிற்க… மீதம் இருந்த மரங்களின் கிளைகளும் சேதமாகி விட்டன. கிளைகள் உடைந்த மரங்கள்கூட மீண்டும் துளிர்த்து வளர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், வேரோடு சாய்ந்த மரங்களும் பாதி முறிந்த மரங்களும் மீண்டும் வளர்வதற்கு வாய்ப்புகளே இல்லை. 150 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே இருந்த நாகலிங்கம், தூங்குமூஞ்சி, சிவன் கூந்தல், மதுரம், மஞ்சள் கொன்றை, அகில், சீம சவுண்டல், தொகு சவானா, நரி மாங்காய் போன்ற அபூர்வ மரங்கள் எல்லாமே விழுந்து விட்டன. மருத்துவக் குணம் கொண்ட தாவரங்கள், செடிகளும் 90 சதவிகிதத்துக்கும் மேல் அழிந்து விட்டன.

 

1964 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் புதுவையைப் புயல் தாக்கி இருக்கிறது. அப்போது எல்லாம் இந்தத் தாவரவியல் பூங்காவுக்கு மிகப்பெரிய சேதம் இல்லை. ஆனால், இப்படி ஒரு புயல் பாதிப்பை யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த மரங்கள் இல்லாமல் வரும் கோடையை புதுவை மக்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்றே தெரியவில்லை. இப்போதே வீட்டுக்கு வீடு எல்லோரும் மரம் வளர்க்க வேண்டும். அரசு முழு மூச்சுடன் இந்தப் பூங்காவைச் சீரமைக்க வேண்டும். இல்லை என்றால் புதுவை எந்த ஆண்டும் இல்லாதபடி வெப்ப நகரமாகிவிடும்” என்று சொன்னார்கள்.

 

புதுச்சேரி அரசு என்ன செய்யப் போகிறது என்பது குறித்து விவசாயத் துறை இயக்குநரான சத்தியசீலனிடம் பேசினோம். ”பூங்காவில் ஒரு சில மரங்களைத் தவிர மற்ற மரங்கள் எல்லாமே விழுந்துவிட்டன. விழுந்த மரங்களை வெட்டி எடுக்கவே மூன்று மாதங்கள் ஆகும். ஒரு சில தொண்டு நிறுவனங்கள் எங்களுக்கு உதவி செய்வதாகச் சொல்லி இருக்கின்றன. எங்களுக்குத் தேவையான நிதி கிடைத்துவிட்டால், சீரமைப்புப் பணிகளில் இறங்கி விடுவோம். கேரளா, பெங்களூரு போன்ற வெளிமாநிலங்களில் இருந்து 10 அடி உயரமுள்ள மரங்களை வாங்கி பூங்காவில் நடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். நிதி கிடைத்த உடனே திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கி விடுவோம்” என்றார்.

 

மக்கள் மனது வைத்தால்தான் புதுவையை மீண்டும் பசுமை நகரமாக்க முடியும். வீட்டுக்கு ஒரு மரம் இப்போதே வளரட்டும்.

 

20120121-061820.jpg

Uncategorized இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

கோட்டகுப்பம் புதிய மெயின் ரோடு – Follow Up

20111212-114244.jpg

(ரோட்டின் பழைய நிலை )

 

(பள பளக்கும் ரோட்டின் புதிய படம் )

கடந்த மாதம் பெய்த மழையால் கோட்டகுப்பத்தின் பிரதான சாலையின் படு மோசமான நிலைய நாம் நமது இணையத்தில் சுட்டி காட்டி இருந்தோம். அதன் பலனாக இப்போது தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை புதிய ரோடு போட்டு இருகிறார்கள். இந்த நல்ல விஷயத்தை பாராட்டும் அதே நேரத்தில் அதில் உள்ள குறையும் சுட்டி காட்ட விரும்புகிறோம்.புதிய ரோடு பழைய சாலை மேல் போட்டதால், தற்போதைய ரோடு மேடாகி விட்டது. மேலும் இருசக்கர வாகன ஓட்டுபவர்களுக்கு மரண பயத்தை உண்டாகுகிறது.மேலும் இரு ரோடுகளை பிரிக்கும் வகையில் நடுவில்  வெள்ளை  கோடு போடவேண்டும் .

 

கோட்டகுப்பம் பேரூராட்சி ரோடு ஓரத்தில் சிமெண்ட் பாதை அமைத்து இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும், நடந்து போகும் மக்களுக்கும் நிம்மதி ஏற்படுத்தி தர வேண்டுகிறோம்.

Uncategorized இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிப்பு

தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம்அதிகரிக்கப்பட்டு என்றும், ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.

 

இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

 

விண்ணப்பம் எப்போது?

 

ஹஜ் பயணம் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) கடைசி வாரத்தில் வெளியிடப்படும். ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மார்ச் 1-ந் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள் 31-ந் தேதி ஆகும். ஏப்ரல் மாதம் கடைசி வாரம் குலுக்கல் நடைபெறும். ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மே மாதம் 31-ந் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும்.

 

நாடு முழுவதும் 28 மையங்களில் செப்டம்பர் மாதம் 19-ந் தேதி முதல் அக்டோபர் 20-ந் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். அக்டோபர் 26-ந் தேதி அராபத் நாள் ஆகும். ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு நவம்பர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை விமானம் மூலம் நாடு திரும்பலாம்.

 

சர்வதேச பாஸ்போர்ட் கட்டாயம்

 

ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவோர் இப்போதே சர்வதேச பாஸ்போர்ட் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

 

இந்த தகவலை அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் மூலமாகவும், மாநில ஹஜ் கமிட்டி தலைவர்கள் வாயிலாகவும் அறிவிக்கச் செய்துள்ளோம். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் 70 வயது ஆனவர்களுக்கு குலுக்கல் இல்லாமலேயே அனுமதி வழங்கப்படும். அவருக்கு துணையாக ஒருவர் ஹஜ் பயணம் செய்யலாம்.

 

தமிழக கோட்டா அதிகரிப்பு

 

தமிழகத்திற்கான ஹஜ் பயணிகள் அடிப்படை கோட்டா இந்த ஆண்டு 11 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்காக முயற்சி மேற்கொண்டு வெற்றி ஈட்டித்தந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 442 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். இந்திய ஹஜ் கமிட்டி எடுத்த சிக்கன நடவடிக்கை காரணமாக, ஹஜ் பயணச் செலவு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.193 கோடி மிச்சமாகியது.

 

சென்ற ஆண்டு ஹஜ் பயணத்தின்போது மக்கா, மதீனா நகரங்களில் விடுதி கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டும் அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஹஜ் பயணிகளுக்கான விமான கட்டணமும் அதிகரிக்கப்படவில்லை.

 

நடவடிக்கை உறுதி

 

இந்தியாவில் இருந்து அழைத்துச்செல்லப்படும் ஹஜ் பயணிகள் வாடகை கட்டிடங்களில்தான் தங்கவைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு வசதியாக மெக்கா, மதீனா பெருநகரங்களில் ஹஜ் இல்லங்களை கட்டுவதற்கு இந்திய ஹஜ் கமிட்டி பரிசீலனை செய்து வருகிறது. ஒருமுறை ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் 5 ஆண்டுகள் கழித்தே மறு பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வேண்டுவோர் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.

 

யாராவது இந்த விதிமுறையை மீறி 5 ஆண்டுகளுக்குள் மறு ஹஜ் பயணத்திற்கு முயன்றால் அவர்களின் பயணம் ரத்து செய்யப்படும். விமானத்திற்குள் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டாலும் இதே நடவடிக்கை தான். அரசு கோட்டா மூலமான ஹஜ் பயணத்திற்கு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் மூலம் பயணம் மேற்கொள்ள முயற்சி செய்வோர் மீதும் இதே நடவடிக்கை தான் எடுக்கப்படும்.

 

கர்நாடகாவில் ஹஜ் இல்லம்

 

எனது வேண்டுகோளை ஏற்று, கர்நாடகாவில் மாநில ஹஜ் இல்லம் கட்டுவதற்கு அம்மாநில முதல்-மந்திரி சதானந்தா கவுடா நடவடிக்கை எடுத்துள்ளார். ஹஜ் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 15-ந் தேதி மதியம் 12 மணிக்கு பெங்களூர் ஹெக்டே நகரில் நடைபெற உள்ளது.

 

அதேபோல், பெங்களூர் தேவனஹல்லி – சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 3.17 ஏக்கர் பரப்பளவில் கர்நாடகா அரசு சார்பில் ஹஜ் கர் என்ற ஹஜ் இல்லம் கட்டப்பட உள்ளது. இதற்கு இந்திய ஹஜ் கமிட்டி தன் பங்காக ரூ.21/2 கோடி வழங்கும்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Uncategorized இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

விழுந்தது, மரங்கள் மட்டுமல்ல வாழ்க்கையும்தான் !

மீண்டுமொரு சுனாமியில் சிக்கியது கணக்காக… திகில் விலகாமல் கிடக்கிறார்கள் புதுச்சேரி, கடலூர், நாகப்பட்டினம், விழுப்புரம்  மாவட்ட மக்கள். அந்த அளவுக்கு இப்பகுதி மக்களின் வாழ்க்கையைக் குலைத்துப் போட்டிருக்கிறது, சமீபத்தில் கோர தாண்டவாமடிய ‘தானே’ புயல்!

 

குறிப்பாக, கடலூர் மாவட்டம் இதுவரை சந்தித்திராத பேரழிவைச் சந்தித்திருக்கிறது. ‘இவ்வளவுதான் பாதிப்பு’ என சேத மதிப்பை இன்னமும் ஒரு வரையறைக்குள் அடக்க முடியவில்லை, .

 

புதுச்சேரியில் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் விவசாயம் காலி. ஏறத்தாழ, ‘ஆயிரம் கோடி ரூபாய் சேதம்’ என்று கணக்கீடு சொல்கிறது. புதுச்சேரிக்கு அழகு கூட்டிக் கொண்டிருந்த மரங்களெல்லாம் வேரோடு சாய்க்கப்பட்டு விட்டன.

 

கடலூர் மாவட்டத்தில், 96 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் அறுவடைக்காகக் காத்திருந்த நெல்மணிகள் மூழ்கி அழிந்து விட்டன. அதோடு, 30 ஆயிரம் ஹெக்டேர்  கரும்பு, 22 ஆயிரம் ஹெக்டேர் சிறுதானியங்கள், 8 ஆயிரம் ஹெக்டேர் வாழை, 2 ஆயிரத்து 100 ஹெக்டேர் தென்னை, 4 ஆயிரம் ஹெக்டேர் மரவள்ளி, 5 ஆயிரம் ஹெக்டேர் எள், 8 ஆயிரம் ஹெக்டேர் மணிலா, 550 ஹெக்டேர் மஞ்சள், 350 ஹெக்டேர் மா, 8 ஆயிரம் ஹெக்டேர் சவுக்கு… என பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், அரசு தரப்பிலிருந்து, இன்னமும் முடிவான எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

 

பரிதாப பலா, முந்திரி !

 

நெல்லுக்கு ஹெக்டேருக்கு பத்தாயிரம் ரூபாய், மற்ற நீர்ப்பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய்… எனப் பயிர் வாரியாக நிவாரணத் தொகையை அறிவித்திருக்கிறார், முதல்வர். முந்திரி சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரிலும், பலா 3 ஆயிரம் ஏக்கரிலும் பயிரிடப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 80% மரங்கள் விழுந்துவிட்டன. நிவாரணப் பட்டியலில் பலா மற்றும் முந்திரி போன்றவற்றுக்கு ஹெக்டேருக்கு ஒன்பதாயிரம் ரூபாய் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

நெல் போன்ற குறுகியகாலப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள்… இந்த போகத்தில் இழந்ததை, அடுத்த போகத்தில் ஈடு கட்டிவிட முடியும். ஆனால், முந்திரி, பலா போன்ற மரங்கள் மூலமாக, காலங்காலமாக பலன் அனுபவித்து, வந்த விவசாயிகளின் நிலைமை. பரிதாபத்திலும் பரிதாபம்! ஒரே இரவில், வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்துவிட்டு நிராதரவாக நிற்கிறார்கள், இவர்கள்.

எல்லாமே தாத்தா காலத்து மரங்கள் !

”எங்கத் தோட்டத்துல இருந்த முந்திரி மரம் எல்லாமே எங்க தாத்தாவும் அப்பாவும் வெச்சதுதான். வயசாகி மரம் விழுந்து போன இடத்துல ஒண்ணு ரெண்டு கன்னுகளை நாங்க வெச்சிருப்போம். இதுவரை அடிச்ச புயல், மழை எல்லாத்தையும் தாங்கி நின்னு சீசனுக்கு சீசன் மகசூல் கொடுத்திட்டிருந்தது. ஆனா, இந்தப் புயல்ல மொத்த மரமும் போயிடுச்சு. ஒரு மரங்கூட நிக்கலைன்றதுதான் எங்களுக்கு பெரிய வேதனையா இருக்கு” தாள முடியாத சோகத்துடன் சொல்கிறார், நெய்வேலியை ஒட்டியுள்ள சொரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெருநிலக்கிழாரான சபா. பாலமுருகன்.

 

கடலூரின் கேப்பர்குவாரி மலையிலிருந்து விழுப்புரம் மாவட்ட எல்லையான உளுந்தூர்பேட்டை வரை நூற்றுக்கணக்கான கிராமங்களிலும் இதே மாதிரியான புலம்பல்தான் ஒலிக்கிறது.

 

பலன் எடுக்க பத்து வருஷம் ஆகுமே !

 

தோப்புக்கொல்லை என்ற ஊரில் வீழ்ந்து போன முந்திரி மரங்களோடு கவலையோடு அமர்ந்திருந்தனர், ரோஜாவனம்-ராமர் தம்பதி. ”இதெல்லாம் வெட்டிட்டுப் புதுசா கன்னு (முந்திரிக்கன்று) வைக்கணும்னா மூணு மாசம் ஆகும். அதுக்கு, ஒரு ஏக்கருக்கு முப்பதாயிரம் ரூபா செலவாகும். ஆனா, அரசாங்கம் ஒரு கொடுக்கற சொற்ப நிவாரணத்தை வெச்சுக்கிட்டு என்ன செய்றது? அது கிடக்கட்டும். அங்க, இங்க கடன் வாங்கியாவது நட்டுடுவோம். ஆனா, பலன் எடுக்க பத்து வருஷம் ஆகுமே. அதுவரைக்கும் எப்படிப் பிழைக்கப் போறோம்கிறதுதான் தெரியல” என்கிறார்கள், கவலையுடன்.  

 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் புலவன்குப்பம் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ், ”கல்யாணத்துக்கு ஐம்பது, நூறு பவுன் நகை போடுறது, கிலோ கணக்கில் வெள்ளி சீர்வரிசையா கொடுக்கிறது, டூ வீலர் வாங்கிக் கொடுக்குறதுனு எங்க ஏரியாவுல தடபுடலாத்தான் கல்யாணம் நடக்கும். அந்தளவுக்கு செல்வம் கொழிச்சதுக்குக் காரணமா இருந்தது, முந்திரிதான்.

வழிச்சுப் போட்ட மாதிரி மொத்த முந்திரியும் போயிடுச்சு. எப்பவுமே, பணப்புழக்கத்தோடயே இருந்த மக்கள், இனி எப்படி வாழப் போறாங்கங்கிறதுதான் மிகப்பெரிய கேள்வி” என்று கலவரமாக நிலவரத்தைச் சொன்னார்.

 

பத்து வருஷத்துக்கு எங்களுக்கு வேலை..?

 

”முந்திரிக் கொட்டை பொறுக்க, மருந்தடிக்கனு வருஷம் முழுசும் எங்களுக்கு வேலை இருக்கும். நாங்க இல்லாம, வீட்டுல பொண்டு பிள்ளைகளுக்கும் முந்திரித் தோட்டத்துல வேலை கிடைக்கும். இப்போ, மொத்தத்துக்கும் மோசம் வந்துடுச்சு. இன்னும் பத்து வருசத்துக்கு என்ன வேலைக்குப் போறது?” என்று புலம்புகின்றனர், செடுத்தங்குடி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான ராமர், லெட்சுமணன் உள்ளிட்டோர்.

 

பண்ருட்டி பலா, இனி அபூர்வமே !

 

”இனிமே பண்ருட்டி பலாவே அபூர்வமாத்தான் கிடைக்கும். வீணை, யாழ், தவில்னு இசைக்கருவி செய்யறதுக்கெல்லாம் பலா மரத்தைத்தான் பயன்படுத்துவாங்க. எல்லாம் போச்சு” என்று சோகம் பொங்குகிறார் கீழக்குப்பத்தைச் சேர்ந்த வேணுகோபால்.

 

மணல்திட்டுக்களை உருவாக்குங்கள் !

 

கடலூரைச் சேர்ந்த விவசாயப் போராளி அருள்செல்வன், ”விவசாயிகளும், தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசு அறிவித்திருக்கிற எந்த நிவாரணமும் போதாது.

 

முந்திரி, பலா விவசாயிகளுக்கு மறுபடியும் கன்றுகள் நடுவதற்கான முழுத் தொகையையும் மானியமாகக் கொடுக்க வேண்டும். அது வளர்ந்து பலன் தரும் வரை பராமரிப்புச் செலவைக் கடனாகத் தர வேண்டும். அப்போதுதான் ‘விதர்பா’ சம்பவங்கள் போல, தமிழ்நாட்டில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க முடியும்” என்று நியாயமான பயத்தை முன் வைத்தவர்,

 

”கடற்கரையோரத்தில் காற்றைத் தடுக்கும் பாதுகாப்பு அரண்களாக இருந்த கடற்கரையோர மணல்திட்டுக்களையெல்லாம், தனியார் தொழிற்சாலைகளுக்காக அகற்றிவிட்டனர். இப்போதைய பெரும் சேதத்துக்கு இதுவும் ஒரு காரணம். மீண்டும் சிறப்புத்திட்டங்கள் மூலம் மணல் திட்டுக்களை உருவாக்க வேண்டும்” என்கிறார் நிஜமான அக்கறையுடன்.

 

நிவாரணத்தைக் கொடுத்து, கொதிப்பை அடக்கினால் போதுமென்று கையைக் கட்டிக் கொண்டுவிடாமல், எதிர்கால வாழ்வாதாரத்தையே தொலைத்து நிற்கும் மக்களுக்கு உதவும் வகையிலும் நீண்டகாலத் திட்டங்களைத் தீட்டுவதுதான் இப்போதைய தேவை. இல்லையென்றால், அந்த பாவப்பட்ட மக்களின் வாழ்க்கை திசை மாறிச் செல்வதை அரசாங்கத்தால் தடுக்க முடியாமல் போய்விடும்!

 

சுட்டிக்காட்டிய பசுமை… சுதாரித்த அமைச்சர் !

 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சீர்காழி, தரங்கம்பாடி போன்ற பகுதிகளிலும் பெரியளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சீர்காழி தாலூகாவில் மட்டுமே சுமார் ஐம்பதாயிரம் ஏக்கர் வயலில் நெல் அழிந்திருக்கிறது. மாவட்டத்தின் ஒரு மூலையிலிருக்கும் இப்பகுதிகள் மட்டும் பாதிக்கப்பட்டிருப்பதால், அதிகாரிகளால் அலட்சியமாகத்தான் பார்க்கப்படுகிறது. இங்கு, பாதிப்பு பற்றிய கணக்கெடுப்பே நடத்தவில்லை.

 

இதையெல்லாம் விவசாயிகள் நம்மிடம் சொல்லிக் குமுற, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வந்திருந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், மாவட்ட ஆட்சியர் முனுசாமி ஆகியோரிடம் எடுத்துச் சொல்லி, விஷயத்தின் தீவிரத்தை உணர்த்தினோம். உடனே, சுதாரித்துக் கொண்ட அமைச்சர், பாதிப்புகளைக் கணக்கெடுக்கச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட, கணக்கெடுப்பு நடக்கிறது.

 


ஏன் விழுந்தன, இத்தனை மரங்கள்?

 

பொதுவாக தொடர் மழைக்குப் பிறகு புயல் வந்தால், மரங்கள் பெருமளவில் விழுந்து சேதம் ஏற்படும். ஆனால், இம்முறை புயலுக்கு முந்தின நாள்தான் மழையே வந்தது. அதுவும்கூட பெருமழை என்று சொல்ல முடியாது. அப்படியிருந்தும் லட்சக்கணக்கான மரங்கள் விழுந்துவிட்டன. அது எப்படி?

 

முதலில் வடக்கிலிருந்து 120 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசியது புயல். அப்போதே மரங்கள் எல்லாம் ஆட்டம் கண்டன. சற்று நேர ஓய்வுக்குப் பிறகு, தெற்கிலிருந்தும் அதே வேகத்தில் காற்று வீச, ஏற்கெனவே ஆட்டம் கண்டிருந்த மரங்கள், பட்பட்டென்று விழுந்து, பலத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டன.

 

Credit : vikatan

Uncategorized இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பால் பற்களை பராமரிக்க…

பால் பற்களை பராமரிக்க…

 

 


குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் ஈறுகளின் மேல் பால் பற்கள் தோன்றுகின்றன. குழந்தைக்கு மூன்று வயது நெருங்கும்போது, சுமார் 20 பால் பற்கள் முளைக்கத் தொடங்கிவிடுகின்றன. ஆறு வயதில் இருந்து, பால் பற்களும் ஒவ்வொன்றாய் விழ ஆரம்பிக்கும். ஒவ்வொரு பால் பல்லுக்கும் கீழ் நிலைப் பற்கள் முளைத்து வருவதற்குத் தயாராக இருக்கும். ஆறு வயதுக்கு பிறகு நிலைப் பற்கள் சரியான அளவில் வளர்வதற்கேற்ற சூழலுக்கு இந்தப் பால் பற்கள் வழிவகுக்கின்றன. ‘ஆரோக்கியமான நிலைப் பற்களுக்கு அஸ்திவாரமே இந்தப் பால் பற்கள்தான். அதில் சொத்தை வந்தால், பல்லின் வேர் வரை ஊடுருவி, நிலைப் பற்களும் நிலைதடுமாறி ஆட்டம் கண்டுவிடும். அதிக அக்கறையோடு கவனித்தால்தான் நிலையான பற்கள் நீடித்திருக்கும்’ என்று இதமாய் எச்சரிக்கிறார் பல் மருத்துவர் சிந்தியா. மணிமணியான பால் பற்களைப் பராமரிக்க அவர் தரும் பளிச் டிப்ஸ்…

 

 தாய்ப் பால், புட்டிப்பால் அருந்தும் குழந்தைகளின் பற்களில், மிச்ச மீதி பால் ஒட்டிக்கொண்டு பற்களுக்குக் கெடுதலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும். பால் குடித்து முடித்ததும் வெதுவெதுப்பான வெந்நீரில் பருத்தித் துணியை நனைத்து பற்களைத் துடைத்துவிடுங்கள்.

 

சில குழந்தைகள் புட்டிப்பாலை வாயில் வைத்து உறிஞ்சியபடியே தூங்கிவிடும். இதனால் குழந்தைகளுக்குப் பல் சொத்தை ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. பால் குடித்து முடித்ததும் புட்டியில் தண்ணீரை நிரப்பி உறிஞ்சச் செய்யுங்கள். பற்களில் படிந்துள்ள பால் வாய்க்குள் ஓடிவிடும்.

 

 கை விரலில் பொருத்திக்கொள்ளும் மிருதுவான ஃபிங்கர் பிரஷ்ஷினை உபயோகித்துக் குழந்தைகளுக்குப் பல் துலக்கிவிடுவது நல்லது. மேலும், குழந்தைகள் பற்பசையை விழுங்கும் ஆபத்து உள்ளதால், சிறிய பட்டாணி அளவுக்கு மட்டுமே பற்பசையைப் பயன்படுத்துவது நல்லது.

 

நல்ல முறையில், பல் துலக்குவதற்கு பட்டாணி அளவிலான பேஸ்ட் போதுமானது.

 

பிரஷ்ஷை சரியான கோணத்தில் பிடித்து, பற்கள், ஈறுகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் மென்மையாகப் பல் துலக்க செய்யவேண்டும். குழந்தைகள் இந்த டெக்னிக்கைக் கையாள்வது கடினம் என்பதால், ஐந்து வயது வரையிலும் பெற்றோரே பல் துலக்கிவிடுவது நல்லது.

 

Uncategorized இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

முஸ்லிம் லீக் ஏற்பாடு

தானே புயலால் கடும் பாதிப் பிற்குள்ளான கோட்டகுப்பம் மக்களின் நிவாரணத்திற்கு 1750கிலோ அரிசி, ஜெனரேட் டர் மூலம் குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விழுப்புரம் மாவட் டம் சார்பில் செயலாளர் ஹாஜி எஸ்.எம். அமீர் அப்பாஸ் வழங் கினார்.

 

அன்மையில் வீசிய கடும் புயலால் புதுச்சேரியை அடுத் துள்ள கோட்டகுப்பம் நிலை குலைந்து போயுள்ளது. பல்லா யிரக்கணக்கான தென்னை மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. ஏராளமான வீடுகள் பாதிக்கப் பட்டுள்ளன. ஒரு வார காலமாக குடிநீர் மின்சாரமின்றி அங்குள்ள மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

 

இவர்களின் துயர் துடைக்க விழுப்புரம் கிழக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் எஸ்.எம். அமீர் அப்பாஸ் கோட்டகுப்பத் தில் தானே புயலால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக 1750கிலோ அரிசி வழங்கினார்.

 

கோட்டகுப்பம் 8முதல் 13வது வார்டு வரையில் உள்ள முஸ்லிம் மற்றும் பிற சமுதாய மக்களுக்கும் இன்னும் அரசின் நிவாரண உதவிகள் கிடைக் காத நிலையில் இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் சார்பாக ஒவ் வொரு குடும்பத்துக்கும் 5கிலோ வீதம் 350 குடும்பங் களுக்கு இந்த அரிசி வழங்கப் பட்டது.

 

மேலும் ஜெனரேட்டர் மூலம் குடிநீரும், மின்சாரமும் மக்க ளின் அடிப்படை பயன்பாட்டிற் காக வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் ஐக்கிய ஜமாஅத் இளைஞரணி செயலா ளர் அப்துல் ஹக்கீம், ஆலோச கர் மௌலானா ஷாகுல் ஹமீது, மேலாளர் சகாயராஜ், கோட்ட குப்பம் ஜமாஅத் முத்தவல்லி இஹ்ஸானுல்லாஹ், இப்ராஹீம், இர்ஷாத் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

Uncategorized இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ ஆறுதல்

கோட்டகுப்பம் சுற்றி உள்ள பகுதிகளை தனே புயல் தாக்கி சின்னான படுத்தி பல நாட்கள் ஆகியும், இது வரை இந்த பகுதிய முஸ்லிம் அரசியல் தலைவர்கள் வந்து  பொதுமக்களை பார்த்து  அறுதல் சொல்ல வில்லை. இதனிடையே மனித நேய மக்கள் கட்சி மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, கோட்டக்குப்பம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் கூறியதாவது:

 

தானே புயலால் கோட்டக்குப்பம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் இப்பகுதிக்கு இதுவரை வரவில்லை. பாதிப்புகளை கணக்கிட்டு, உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். கோட்டக்குப்பம் பகுதியில் வீடுகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. தென்னந்தோப்புகள் அழிந்துள்ளன. அரசு உடனடியாக கோட்டக்குப்பம் பகுதிக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். இவ்வாறு கூறினார்.

 

அப்போது, மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது, தமுமுக துணை செயலாளர் ஜின்னா, தேவநேயன், நகர செயலாளர் முகமது அலி, மாவட்ட தலைவர் முஸ்தாபுதீன் உடன் இருந்தனர்.

 

இது போல் பல கட்சி தலைவர்கள் பார்த்து இங்கு இருக்கும் அவலத்தை

அரசுக்கு சொல்ல வேண்டும்,செய்வார்களா முஸ்லிம் பாராளுமன்ற உறுபினர்கள் ?

Uncategorized இல் பதிவிடப்பட்டது . 2 மறுமொழிகள் »

எது சிறந்த சமையல் எண்ணெய்?

இன்று ஷாப்பிங் என்பதே ஒரு கலாசாரமாக மாறிவிட்டது. ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து பல பொருட்களை வாங்குகிறோம். ஆனால், செலவழித்த காசுக்கு அந்த பொருட்கள் தரமானதா எனில் கேள்விக்குறிதான்!  

 

தற்கொரு தீர்வாக, கான்சர்ட் என்கிற அமைப்பு மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்தும் பொருட்களின் தரத்தை அங்கீகரிக்கப்பட்ட, தரமான லேப்களில் சோதித்து, அதை நாணயம் விகடன் மூலம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தது.

 

ஏழு முக்கிய பொருட்களையும் மூன்று முக்கிய சேவைகளின் தரத்தையும் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட அந்த முடிவுகள் அடுத்தடுத்து வரும் நாணயம் விகடனில் வெளியாகும். இந்த ஆய்வில் முதல் ரிப்போர்ட், மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமையல் எண்ணெய் பற்றியது. தென் இந்தியாவில் விற்பனையாகும் பெரிய நிறுவனங்களின் சமையல் எண்ணெய் பிராண்டுகள் தேர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

 

அந்த முடிவுகளை தெரிந்துகொள்ளும் முன், ஒரு பொருளை மக்கள் எப்படி தேர்வு செய்கிறார்கள் என்பதை அறிய ஒரு சிறிய சர்வே நடத்தப்பட்டது. அந்த சர்வேயின்படி, பொருட்களை வாங்குகிறவர்கள் விளம்பரத்தைப் பார்த்தும், டாக்டர் சொன்னதாலும் வாங்கியதாக சொன்னார்கள். இன்னும் சிலர் விலையைப் பார்த்தும், இலவசப் பொருட்களுக்காக வாங்கியதாகவும் சொன்னார்கள். தரத்தைப் பார்த்து யாரும் பொருளை வாங்குவதாக சொல்லவில்லை.  

 


 

இனி ரிப்போர்ட்டுக்குள் செல்வோம். கீழே இருக்கும் அளவுகோல்களின் அடிப்படையில் சமையல் எண்ணெய்களை சோதனை செய்தோம்.

 

1. பேக்கேஜிங் (லேபிளுடன்) 2. ஆரோக்கிய மானதா? 3. தரமானதா? 4. விலை? 5. நிறம், மணம், பார்வை எப்படி இருக்கிறது போன்ற அளவு கோல்களை வைத்து சோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் இதோ!

 

* பி.எஃப்.ஏ. விதிமுறைகள் 1955 மற்றும் எஃப்.எஸ். அண்ட் எஸ் விதிமுறைகள் 2011- விதிமுறைபடி, எண்ணெய்யின் லேபிளில் Free From argemone oil என்ற எச்சரிக்கை வாசகத்தைக் கட்டாயம் எழுதி இருக்க வேண்டும்.

 

அதாவது, இந்த எண்ணெய்யில் நச்சுப் பொருட்கள் அல்லது சாப்பிடக்கூடாத எண்ணெய் எதுவும் இல்லை என்ற உத்தரவாதம் அந்த லேபிளில் இருக்க வேண்டும்.

 

ஆனால், பின்வரும் சில நிறுவனங்கள் தயாரிக்கும் எண்ணெய் பாக்கெட்டுகளில் இது மாதிரியான எச்சரிக்கை வாக்கியங்கள் எதுவும் இல்லை.

 

 

எஃப்.எஸ்.எஸ்.ஏ. விதிமுறைகள் 2011-படி எண்ணெய்யில் இருக்கும் சத்துகளை (Nutritional Information) லேபிளில் குறிப்பிட வேண்டும். ஆனால், காதி கிராமத்யோக், நந்தினி, இதயம் உள்ளிட்ட சில எண்ணெய்களில் இந்த தகவல்கள் இல்லை.  

 

பொருளின் பெயர், உற்பத்தியாளர் பெயர், அவரது முகவரி, பேட்ச் கோட் எண், உற்பத்தி செய்த தேதி, எவ்வளவு நாள் பயன்படுத்தலாம் என்ற தகவல், சத்துப்பொருட்களை பற்றிய தகவல், வாடிக்கையாளர்கள் புகார் செய்வதற்கான எண்கள் மற்றும் நச்சு பொருட்கள் இல்லை என்பது போன்ற தகவல்கள் கட்டாயம் அதன் லேபிளிலில் இருக்க வேண்டும்.

 

எனினும், இதை சரிபார்த்து வாங்குவது வாடிக்கையாளரின் கடமையே!

 

Nandri : Vikatan

Uncategorized இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »
Follow

Get every new post delivered to your Inbox.

Join 1723 other followers